அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இன்னும் எத்தனை காலத்திற்குதான் இந்த அவலத்தை வேடிக்கை பார்க்கப் போகிறோம்?" என வேதனையுடன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இளைஞர் ஒருவர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அந்நாட்டின் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான விவாதத்தையும் மீண்டும் எழுப்பியிருக்கிறது.
இந்நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு இன்று திரும்பிய அதிபர் ஜோ பைடன், இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "டெக்சாஸ் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மிகவும் கொடூரமான ஒன்று. இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்ற உலக நாடுகளில் மிகவும் அரிதாக நடைபெறுகிறது. ஆனால், அமெரிக்காவில் இது அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. இதற்கு என்ன காரணம்? ஆயுதக் கட்டுப்பாடு குறித்து நாம் வெறுமென பேசிதான் வருகிறோம். எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் இதுவரை அமெரிக்காவில் எடுக்கப்படவில்லை. துப்பாக்கி கலாச்சாரத்துக்கு என்று நாம் முற்றுப்புள்ளி வைக்க போகிறோம்? எத்தனை காலத்திற்குதான் இந்த அவலத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்? நான் மிகுந்த விரக்தியில் இருக்கிறேன். நாம் துரிதமாக செயல்பட வேண்டிய நேரம் இது" என ஜோ பைடன் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MLUo6ab